“இருட்டு அறையில் முரட்டு“ குத்து திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக “இரண்டாம் குத்து“ திரைப்படம் தயாராகி வரும் நிலையில் அதன் பெஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியதையடுத்து குறித்த படத்திற்கு கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், அண்மையில் இரண்டாம் குத்து படத்தின் விளம்பரத்தை நீக்கக்கோரி இந்தியாவைச் சேர்ந்த பெருமாள் என்பவர் இந்திய உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று கிருபாகரன், புகழேந்தி ஆகிய நீதிபதிகள் கொண்ட மன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது இரண்டாம் குத்து படத்திற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் ‘‘அந்தக்கால படங்கள் குடும்ப உறவுகளையும், நாட்டு பற்றையும் வளர்க்கும் விதமாக இருந்தது. தற்போது ஆபாசத்தைதயும், வன்முறையையும் பரப்புவதாக இருக்கிறது. விளம்பரத்திற்காக இரட்டை அர்த்தம், தகாத வார்த்தை வசனங்களை வைக்கின்றனர்.’’ என்றனர்.
மேலும், இது தொடர்பாக பேஸ்புக், யூடியூப் கூகுள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் நிறுவனங்களுக்கு கண்டன அறிக்கையை அனுப்பவும் உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன் தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்கு தணிக்கை குழு ஏதும் கிடையாதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ‘‘பெரும்பாலான தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் குற்றச் செயலுக்கு காரணமாக அமைகின்றன. தவறான உறவுகள் குறித்தே பல கதைகள் அமைகின்றன’’ என்ற கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.