வெளி மாவட்டங்களில் இருந்து வவுனியாவுக்குள் நுழைவோருக்கு எல்லைப் பகுதிகளில் வெப்ப பரிசோதனையுடன் பதிவு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்தார்.
மேலும் கூறுகையில்,
நாடளாவிய ரீதியில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் அதனைக் கட்டுப்படுத்த மாவட்ட செயலகம் மற்றும் சுகாதார திணைக்களம் என்பன பாதுகாப்பு தரப்புடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில் ஹொரவப்பொத்தானை வீதியில் மடுகந்தை, கண்டி வீதியில் ஈரப்பெரியகுளம், யாழ்.வீதியில் ஓமந்தை, மன்னார் வீதியில் பறயனாலங்குளம் ஆகிய பகுதியில் இந் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளோம்.
இதற்கு பாதுகாப்பு தரப்பினரின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தென்பகுதியில் இருந்து அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் சாரதி, நடத்துனர்களுக்கு தொடர்ச்சியாக பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.